-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்ற ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 19.03.2019 மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட இச்சடலம் ஆரையம்பதி -2 செல்வா நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் (வயது 49) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய சடலத்தை அவதானித்த மீனவர்களும் பொதுமக்களும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
செவ்வாய்க்கிழமை பகலளவில் 19.03.2019 இவர் தனது வளர்ப்பு நாயுடன் முச்சக்கரவண்டியில் ஏத்துக்கால் கடற்கரைக்குச் சென்று, கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார்.
இதன் பின்னரே இவரது சடலம் கரையொதுங்கியுள்ளதை மீனவர்கள் அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment